சென்னைக்கு வரவேற்கும் நுழைவு பகுதியான ஆவடிக்கு வடக்கே சுமார் 8 கி.மீதூரத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நகர் என்ற இடத்தில் 2015 ஆம் ஆண்டு பூமி பூஜை செய்யப்பட்டு பணிகள் பல துவங்கி கோ பூஜை, லலிதா சகஸ்ரநாம பாராயணம், மகா சண்டிகா ஹோமம் மற்றும் பல கூட்டு பிரார்த்தனை, பல ஆன்மீக கொடை வள்ளல்கள், மற்றும் ஊர் பொதுமக்கள், ஆலய உறுப்பினர்கள் அனைவரின் கூட்டு முயற்சியால் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 11/02/2018, ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பான முறையில மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பல மூர்த்திகளின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீ புவனேஸ்வரியே வழிபடும் பக்தர்களுக்கு அவளது கடைக்கண் பார்வையால் சகலஷேமங்களும் உண்டாகின்றன என அபிராமி பட்டர் கூறியுள்ளார்.
தினமும் அன்னையை வழிபடுதல் மிகச்சிறந்தது. அதிலும் செவ்வாய், வெள்ளி, பவுர்ணமி தினங்களில் வழிபட்டால் விசேஷ பலன்களை அளிக்கும். அவள் மூவுலகிற்க்கும் பேரரசியாவாள். அவளுடைய விருப்பத்தினால் தான் அனைத்து உலகங்களும் இயங்குகிறது. அன்னை புவனேஸ்வரி இந்த உலகையே ரட்சித்து காப்பவள். நமது ஆலயத்தில் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் பாசம், அங்குசம் வரம், அபயம் ஆகியவை தாங்கிய நான்கு கரங்களுடன் வேண்டுவோர்க்கு வேண்டியதை அள்ளித் தரும் தாயாக கருணை கண்களுடன் அருள்பாலிக்கிறாள்.
அனைவரும் வருக! அம்மன் அருள் பெறுக!
முழுமுதற் பொருளே, ஸ்ரீ பால விநாயகரே, சதுர்த்தியின் நாயகரே, காரிய சித்தி அளிப்பவரே, ஒளவைக்கு அருளியவரே, பதற்றம் அற்றவரே, அல்லல் துன்பம் போக்கி காக்கும் எங்கள் வரசித்தி பால விநாயகனே போற்றி! போற்றி!
கந்த உருவே எங்கள் சொந்த குருவே, எதிரிக்கும் அருள்பவனே, அன்பின் இலக்கணமே, தமிழின் தொடக்கமே, சஷ்டியின் விளக்கமே, நேர்மையின் வடிவே, வினைகளை ஓட விடும் வேலவனே, எங்கள் சிக்கல் சிங்காரமே, போற்றி! போற்றி!
கலியுகத்தின் தொண்மையே, எங்கள் ஏழுமலை வாசனே, ஏகாந்த ரூபனே, ஏகாதசி நாயகனே, உலகத்தை காத்து அருளும் கருட வாகனனே, சகஸ்ரநாம ரட்சக ஸ்ரீநிவாச பரம தயாளனே, துளசி மாலை விரும்பி அணியும் அலங்கார பிரியனே, காட்சி அளிக்கும் மாய கண்ணனே, எங்கள் அன்னையின் அண்ணனே,எம்மை என்றும் காக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரனே போற்றி! போற்றி!
அயன் ஆணவத்தை அழித்து காத்த ஆதி பைரவரே, அண்டகாசுரனை ஓழித்து உலகிற்கு ஒளி கொடுத்த அஷ்ட பைரவரே, சிவ சொத்தை காத்து, அனைத்து தடைகளையும், தீமைகளையும் போக்கும் ரவுத்திரரே, அஷ்டமியில் வழிபடுவோருக்கு கிரக தோஷங்கள் நீக்கி ராஜ யோகத்தை அருளும் கால ஞானியே, மோட்சம் அளிக்கும் காசி ராஜனே, ஆலய பாலகனே எங்கள் கால பைரவரே போற்றி! போற்றி!
சத்தியம் தவறாது சமயத்தில் பிடிப்பவரே, சூரியனின் புதல்வரே, எளியோரை வளியோராக்கும், அன்புள்ளம் கொண்ட ஆயுள் காரகனே, நீதி, நேர்மை காத்து, அளவற்ற செல்வம் அருளும் யோகமந்த ரூபனே, சிவ கட்டளை ஏற்று, எவர் தடுத்தாலும் கடமையைச் செய்யும் காக்கை வாகனனே, உன்னை வணங்கினால் சிவ கருணையுடன் நெறிப்படுத்தும் தோத்திரப் பிரியனே, ஈஸ்வர பட்டம் பெற்ற எங்கள் யோக சனீஸ்வரனே போற்றி! போற்றி!
நவகிரக தோஷங்கள் விலகி அனைத்து நலன்களையும் பெற
" வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்
உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே! "
இந்த ஆலயத்தில் வெள்ளிக்கிழமை, மற்றும் செவ்வாய் கிழமைகளில் சிறப்பான முறையில் பூஜைகள் நடைபெறும். பெளர்ணமி மற்றும் சிறப்பு விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் மிக முக்கியமாக நமது ஆலயத்தில் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாராயணம் மற்றும் அபிராமி அந்தாதி பாராயணம் தினமும் நடைபெறுகிறது. குறிப்பாக ஓவ்வோரு சனிக்கிழமை மாலை நேரத்தில் மகளிர் குழுவினர் ராம நாம பஜனை சிறப்பாக நடைபெற்று வருகிறது. (மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலை நேரத்தில் திருப்பாவை பாராயணம் நடைபெறும்.
அனைவரும் வருக! அம்மன் அருள் பெறுக!
-Sri Bhuvaneshwari Amman Temple